கிருஷ்ண வர்ணம்
மாயக்கண்ணனே வா..... மண்ணை தின்றவனே வா.....
மேகவண்ணனே வா..... வெண்ணெய் திருடனே வா.....
ஆழிலை மழலை நீ நீலநிறை தெய்வவிதை - உனை
அமுதூட்டி ஆளாக்கினாள் ஆயர்பாடியில் யசோதை.....
அரும்பில் செய்யும் குறும்பில் கண்ணன் நீ மேதை
அன்னையை ஏய்ப்பதிலோ மன்னன் நீ மாமேதை.....
மாட்டி கொண்டால் திருகுவாள் உன் பிஞ்சு காதை - பின்
மனம் வெதும்பி கொஞ்சுவாள் கெஞ்சுவாள் அவள் பேதை.....
மாய வண்ணனே வா..... மதுரா பாலனே வா.....
மால் மணிவண்ணனே வா..... மாதர் மன கள்வனே வா.....
குழலை புல்லாங்குழலை நீ இசைத்தால்
பூபாளமே தான் மயங்கும் - இந்த
பூலோகமே கொஞ்சம் கிறங்கும் பின் இயங்கும்.....
குழலை பூங்குழலை நின் கை கலைத்தால்
பூவையர் மனமே தனை மறக்கும் - பின்
பூங்காற்றிலே சற்று மகிழ்ந்து பறக்கும்.....
மாதவனே வா..... மாதவி மணாளனே வா.....
மதுசூதனனே வா..... மலையேந்தி வீரனே வா.....
கோமாதா நிறைந்து கோகுலமே ஆனது கோசாலை
சொர்க்கத்திற்கே இன்சவை சொல்லும் அந்த பால்சோலை.....
கோலமிகு கோபியர் கூடி ஆடி தூவியது
கோடி பூக்கள் செண்டு நாளும் காலை.....
கோபாலன் நீயோ தேடி ஓடி சூடியது
கோதை ராதை தொடும் மங்கள மாலை.....
சக்திவேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக